Posts

Showing posts from July, 2021

அவர்கள் வருகிறார்கள் - மு.மேத்தா

___________________________________ அவர்கள் வருகிறார்கள் (மு.மேத்தா) ____________________________________          24 கவிதைகள் அடங்கிய சிறு கவிதைத் தொகுப்பு."சிறகே ஒரு சுமைதான் " "சுதந்திர தாகம் "  "வெவ்வேறு முகங்கள் " "காற்றை மிரட்டிய சருகுகள் " "உதிரும் கனவுகள் " "அவர்கள் வருகிறார்கள் " போன்ற பல கவிதைகள் படிப்பவரை ரசிக்க வைக்கும். ரசிக்க வைத்த சில வரிகள்... "பருவம் ஒரு சிறகுதான் வானில் பறக்க வழியில்லாத போது சிறகே ஒரு சுமைதான்.." "நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்களும்  ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும் .."                  (விலை : ரூ 40)                  (கவிதா வெளியீடு)

ஏழாம் சுவை - மருத்துவர் கு.சிவராமன்

___________________________________ ஏழாம் சுவை (மருத்துவர் கு.சிவராமன்) ___________________________________         பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விசயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது..          ஒரு மருத்துவராக மட்டும் இல்லாமல்.. இன்றைய சூழல்மீது அக்கறை கொண்டவராக.. இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கை கொண்டவராக.. சிவராமன் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் உணவு தொடங்கி உள்ளம் வரையிலான  வரையிலான பலவிதத் தெளிவுகளை நமக்குள் ஏற்படுத்தும் என்பது திண்ணம் ..                   (விலை : ரூ 130)                   (விகடன் பிரசுரம்)

ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

__________________________________ ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் __________________________________       ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சீர்மிகு 32 சிறுகதைகளின் அணிவகுப்பு இந்நூல்.         ஒவ்வொரு சிறுகதையிலும் அவர் முன்னிருத்தும் கருத்துகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை பிரதிபலித்து .. நமது அகத்தைக் கிளறி புது சிந்தனையை ஊற்றெடுக்க வைப்பதாக அமைந்துள்ளன.          வறுமையில் உழலும் கதைமாந்தர்கள் துன்பத்திலும் குணம் மாறா சிறப்பு.. அழகு நடை .. இவை இந்நூலின் சிறப்புகள்.         சிறார்களின் பசி, சுற்றுலா ஏக்கம், அலுவலகச் சுமை, பட்டாசு தீ விபத்து, பெண்ணின் திருமணக் கனவு, பாலியல் சீண்டல், கல்விமுறை இவையெல்லாம் தான் கதைக்கான கரு.. நல்லதோர் படைப்பு.. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்..               (விலை : ரூ 180)               (பாரதி புத்தகாலயம்)

அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

________________________________ அம்மா வந்தாள் (தி.ஜானகிராமன்) ________________________________          சமூகம் நிறுவி காப்பாற்றிவரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது இப்புதினத்தின் கரு.        மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல.. அவை உணர்வுகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களில் மனித வாழ்க்கை இருக்கிறது... இருக்கும்... என்பதை வலியுறுத்தும் கதை.          ஆச்சாரங்களையும், விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள் தான்.. என்பதை இயல்பாகச் சொல்வது தி.ஜா அவர்களின் கலைநோக்கு..      அந்த நோக்கில் மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது  "அம்மா வந்தாள் "..                 (விலை : ரூ 225)                 (காலச்சுவடு பதிப்பகம்)

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

_________________________________ கறுப்பு மலர்கள் (நா.காமராசன்) __________________________________         உலகத்தின் பல பாகங்களிலிருக்கும் கவிதை நாகரீகத்தின் எதிரொலிகளை நூல் முழுக்கக் காணலாம்.        கவிதைக்கான கரு புதியது.. புதுமையானது..முதலில் மயக்கும்..பின் மயங்க வைக்கும்.        உருவகஅணியை உத்தியாக வைத்துக் கொண்டு உரைநடைக் கவிதை வடித்த உயரிய கவிஞர். புல் ...... ____________ வால் முளைத்த புல்லே! வசந்தத்தின் பச்சை முத்திரையே! உடல் மெலிந்த தாவரமே! உன்னை பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்!! கடல்.... _______________ முத்துகளின் பள்ளம்... கப்பல்களின் சமவெளி... நதிகளின் கல்லறை...       படிமக் கவிதை வடித்த உருவகக்கவிஞரின் கவிதைகளை வாசியுங்கள்...                 (விலை : ரூ 80)                 (கவிதா பதிப்பகம்)

தூக்கு தண்டனை(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்..கௌரி கிருபானந்தன்

__________________________________ தூக்கு தண்டனை (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்..கௌரி கிருபானந்தன்  ___________________________________        தன்னுடைய அபார எழுத்தாற்றலால் புத்தகத்தை படிக்க கையில் எடுத்தவர் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு படிப்பவர் மனதில் திகைப்பை ஏற்படும் வகையில் எழுதுவதில் வல்லவர்.          சிரஞ்சீவியின் வேடிக்கைத்தனமான பேச்சுகளையும், செய்கைகளையும் விளக்கும் ஆசிரியர், அவன் தூக்குக் கயிற்றிலிருந்து விடுபடும் வரை - கதையை மின்னல் வேகத்தில் கொண்டு செல்வது அருமை.         அதன்பின் கால் பாகம்.. என்ன இருக்கும் என்று நினைத்தால் கதை விமான வேகத்தில் பறக்கிறது . ஆசிரியரின் படைப்புலகில் மற்றும் ஒரு பிரமாண்டம்.        விஞ்ஞானச் வளர்ச்சி அடைந்தவிட்ட காலத்திலும் ஆகாயவிமானம் பறப்பதை அதிசயத்துடன்தான் மக்கள் பார்க்கிறார்கள்.அதுபோல எழுத்துலகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் எண்டமூரி வீரேந்திரநாத் போன்ற எழுத்தாளர்களைப் பார்த்து அதிசயத்துக் கொண்டுதான் உள்ளது.             ...

முசோலினி - சாமிநாத சர்மா

_______________________________ முசோலினி (சாமிநாத சர்மா) _______________________________         முசோலினி ஒரு சரித்திர புருசன்.சோர்வியினால் உறங்கிக் கிடந்த ஒரு சமூகத்திற்கு தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்துகளை உட்புகுத்தி அவர்களை, தலைநிமிர்ந்து நிற்கச் செய்வதோடு மற்ற சமூகங்களுக்கு எதிரே தோள்தட்டவும் செய்வித்தான்.           அவன் தோற்றுவித்த பாசிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, அவ்வளர்ச்சியின் காரணமாக இத்தாலியில் உண்டான மாற்றங்கள் இவற்றைவிட.. முசோலினியின் வாழ்க்கை சரித்திரம் நன்றாக விளக்கப்பட்டிருக்கும்..         அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. வசிப்பை நேசிப்போம்..                 (விலை : ரூ 70)                 (ராமையா பதிப்பகம்)

மூன்றாம் உலகப்போர் - வைரமுத்து

_________________________ மூன்றாம் உலகப்போர் (வைரமுத்து)  ________________________         மனிதகுல நகர்வுக்கு போர் அவசியம் என்றே மானிடவியல் கருதுகிறது!         இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு!        இது முகத்துக்கு முகம்பார்த்து மோதாத போர்! மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்! மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்!          புவி வெப்பமயமாதல் என்ற பூதம் தலைவழியாகவும், உலகமயமாதல் என்ற பூதம் கால் வழியாகவும் ஒரே நேரத்தில் விழுங்கிக் கொண்டே வருகின்றன விவசாயியை!       இந்த இரு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் போர்!    இந்தப்போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும், மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்பதென்னவோ மனிதன்தான் !      மண்ணில் முளைத்த மனிதர்கள், உணர்ச்சியில் ஊறிய மொழி, சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள், அனுமதிக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் நிகழும் கற்பனை, நாங்கள் நடந்து பழகிய பூகோளம், எல்லோரும்...

சதுரங்கக் குதிரைகள் - நாஞ்சில் நாடன்

___________________________________ சதுரங்கக் குதிரைகள் (நாஞ்சில் நாடன்) ___________________________________           சதுரங்கத்தில் குதிரைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை வைத்து இந்தப் பெயரை வைத்தாரா அல்லது இலக்குகள் இல்லாமல் இங்கும் அங்கும் தாவுவதைக் குறிக்க இத்தலைப்பை வைத்தாரா தெரியவில்லை..         திருமணமாகாத.. உறவுகளோடு ஒட்டாத.. சொந்த ஊர்ப்பக்கம் ஒதுங்காத.. தாய் தந்தை இழந்த நாராயணன் பரிதாபத்திற்குரியவன்.         கதை முழுக்க மும்பை, மகாராஷ்டிரா பக்கம் நடக்கிறது.பிளாஷ்பேக் நாகர்கோவில் வந்து போகிறது.        புதினம் முழுவதும் தனிமை.. உறவுகள் தூரம் போகும் வெறுமை.. விதவையை மறுமணம் செய்யவோ, விவாகரத்து செய்த பெண்ணை மணக்க மனம் வராத கொடுமை .. அனுசரணையான அலுவலக சகாக்கள் என்று போகிறது கதை..       புதினத்தின் காட்சிகள் கண்முன் விரிபவை..நல்லதொரு வாசிப்பனுபவத்தை தரும் நூல் இது..                  (விலை : ரூ 120)             ...

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

_______________________________ யுகபாரதி கவிதைகள் (யுகபாரதி) ______________________________         மணப்பத்தாயம், பஞ்சாரம், அந்நியர்கள் உள்ளே வரலாம், தெப்பக்கட்டை, தெரு வாசகம் உள்ளிட்ட 7 கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.        சமூகத்தின் இழிகுணங்களைப் பழிக்கும் இவர் கவிதைகள், வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிதைவுற்றுப் போகும் மனிதர்களின் அவலங்களைப் பரிவோடு பேசுகின்றன.         எளிமை.. அழகான மொழிநடை.. மனிதர்களின் மீதான கரிசனம் ... இவையெல்லாம் இக்கவிதைத் தொகுப்பின் சிறப்புகள்.        யுகபாரதியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகன் தொகுப்பு இப்புத்தகம்.                (விலை : ரூ 500)                (டிஸ்கவரி புக் பேலஸ்)

உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் - Dr.அப்துல் கலாம்

______________________________ உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் (Dr.அப்துல் கலாம்) _______________________________         நமது தேசத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடம் கலாம் அவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும்,  அண்ணா பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த மாணவ சமுதாயத்தினரிடம் நிகழ்த்திய உரைகளும்தான் இப்புத்தகம்.        இந்நூல் இளைய சமுதாயத்தினரையும், இந்திய மாணவ சமுதாயத்தினரையும் வழிநடத்தும் மகத்தான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.               (விலை : ரூ 100)               (கண்ணதாசன் பதிப்பகம்)

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

_________________________________ வந்தார்கள் வென்றார்கள் (மதன்) __________________________________        தைமூரின் படையெடுப்பில் தொடங்குகிறது இந்நூல்.       பதினேழு முறை இந்தியாவிற்குள் படை எடுத்த கஜினியிலிருந்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பகதூர்ஷா வரை.. சொல்லப்பட்ட இந்த  வரலாற்றுத் தொடரில் சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம்.. வாசிப்பவரை சிலிர்க்க வைப்பது நிஜம்..        ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது.         வரலாற்றை.. எளிமையாகவும், ஆழமாகவும் சொல்லமுடியும் என்று உணர்த்திய புத்தகம்.       "மனிதன் மாறினாலும், மனம் எங்கே மாறுகிறது " என்று நுட்பமாக மதனால் மட்டுமே எழுத முடியுமோ என நினைக்க வைக்கும் நடையழகு அருமை.        235 ஆண்டு வரலாற்றை, 280 பக்கங்களில் எழுத முடியுமா? என்ற கேள்விக்கு "ஆம் " என்ற பதிலைத் தருகிறது இந்நூல்.        ...

ஆயிஷா - நடராசன்

__________________________________ ஆயிஷா (நடராசன்) __________________________________        கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை.        இன்றைய கல்விமுறை, பள்ளிச்சூழல், மற்றும் ஆசிரியர்களின் தரம் ஆகியவற்றை விவரிக்கும் குறுநாவல்.        செக்கு மாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை, ஆயிஷாவின் அடுத்தடுத்த கேள்விகளால் முதன்முறையாக ஆசிரியராகப் பிறப்பெடுக்கிறார்.       கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள ஒரு பள்ளி மாணவி, பள்ளி ஆசிரியர்களால் எவ்வாறு மாற்றப்படுகிறார் என்பதை விவரிக்கும் நூல்.       "கணையாழி "குறுநாவல் போட்டியில் 1996 ல் முதல்பரிசு பெற்ற நூல்.       இன்றும் லட்சக்கணக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்தி வாய்ந்த படைப்பு.                    (விலை : ரூ 15)                    (பாரதி புத்தகாலயம்)

எம்மொழி செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான்

____________________________________ எம்மொழி செம்மொழி (கவிக்கோ அப்துல் ரகுமான்) ____________________________________       தமிழ்மொழியின் புகழ்பாடும் நூல் இது!       எம்மொழிக்கும் மூத்தவளே! எம்மொழியாய் வாய்த்தவளே! செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந்து இருப்பவளே! நயந்த மொழிகள் நாலாயிரம் இருந்தும் உயர்ந்தவளே! உன்னைப்போல் உயிர்மெய்யோடு இருப்பவர் யார்? வாயின் சுவாசமே! வைதாலும் தித்திக்கும் காயாத கனிச்சுவையே! காதருந்தும் கள்ளே!       எம் மொழி செம்மொழி எனக் கேட்டால்,   எம்மொழி செம்மொழி எனச் சொல்லும் புகழ் கொடுத்தாய்! அகம் நீ! புறம் நீ!என் ஆருயிரும் நீ! எங்கள் முகம் நீ! முகவரி நீ! முடியாத புகழும் நீ!! வாசிப்பவரை வசியப்படுத்தி, வயப்படுத்தும் எழுத்துக்குச் சொந்தக்காரர் "கவிக்கோ "!            (விலை _ ரூ 200 )             (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்)

பட்டத்து யானை - வேல.ராமமூர்த்தி

__________________________________ பட்டத்து யானை (வேல.ராமமூர்த்தி) ___________________________________         பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீரவரலாறுதான் இந்நூல்.          வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவன் சித்திரங்குடி மயிலப்பன். அவன் துரதிஷ்டமாக, அவர்களுக்கு எதிரான போரில் இறந்து விடுகிறான். "வீரர்கள் புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள்..." என்பதற்கிணங்க முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மாவீரன்.         இளைஞர்களை, படை சேர்த்து.. பயிற்சியளித்து .. பிரிட்டிஷ் படையைச் சூறையாடுகிறான்.       பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நேரடியாக மோதும்போது யார் வென்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் மிக்க நடையில் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.       இக்கதை ஜீ.வி யில் வெளிவந்தபோது பரபரப்பாக பேசப்பட்டது.              (விலை : ரூ 380)              (டிஸ்கவரி புக் பேலஸ்)

வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார்

_________________________________ வேடிக்கை பார்ப்பவன் (நா.முத்துக்குமார்) _________________________________           இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை... வலியை ... இன்பத்தை...இந்த நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார் நா.முத்துக்குமார்.         "அணிலாடும் முன்றில் " நூலுக்குப்பின் " வேடிக்கை பார்ப்பவன் "நூலில் மொழிநடையில் அடுத்தக்கட்டப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.        வடிவத்திலும், உத்தியிலும், மொழிநடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை.          இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்குவர பாடுபட்ட தருணங்கள், பத்திரிகைத்துறையில் பணியாற்றியது என பரவலாக தனது அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார்.                   (விலை : 250)                   (விகடன் பிரசுரம்)

சிறுபஞ்சமூலம் (மூலமும் உரையும்) - மகேந்திரவர்மன் சம்பத்து

________________________________ சிறுபஞ்சமூலம் (மூலமும் உரையும்) (மகேந்திரவர்மன் சம்பத்து)  _________________________________          பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம்  நூலுக்கு.. சிறியவர்களும், பெரியவர்களும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் உரை தந்துள்ளார் ஆசிரியர்.        ஒவ்வொரு பாடலுக்கும் அருஞ்சொற்கள், விளக்கம், சுருக்கம் என்ற முறையில் அமையப்பட்ட அரியதொரு நூல் இது.         இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து அறக்கருத்துகள் மனிதனின் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும்.        தமிழர்களின் அறிவுப்புதையல்.. அறப்புதையல் (சிறுபஞ்சமூலம்).. இந்நூலுக்கான இந்த உரை படிப்பவரை கவரும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.                 (விலை : ரூ 100)                 (சாரதா பதிப்பகம்)

திருப்பு முனைகள்(அக்னிச்சிறகுகள் இரண்டாம் பாகம்) - டாக்டர். அப்துல் கலாம்

__________________________________ திருப்பு முனைகள் (அக்னிச்சிறகுகள் இரண்டாம் பாகம்)  (டாக்டர். அப்துல் கலாம்) ____________________________________           இந்நூல் இந்தியர்களின் எண்ணம், கவலைகள், விருப்பங்கள் முதலியவற்றை எதிரொலிக்கிறது.          கலாம் அவர்களிள் வாழ்வில் பத்தாண்டுகள் நடந்த சம்பவங்கள் ... அவற்றை மீண்டும் எண்ணிப்பார்த்து நெஞ்சில் நிலைத்த அனுபவங்களை இப்புத்தகத்தில் கூறியுள்ளார்.        500 பல்துறை வல்லுனர்கள் துணையுடன், தொலைநுட்ப தொலைநோக்கு 2020 என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால் இந்தியாவை ஒரு வல்லரசாக முன்னேற்றம் அடைந்த நாடாக மாற்றுவதற்கானப் பயணப் பாதையை தீர்மானித்தார்.  அப்பாதையில் தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது.               (விலை : ரூ 190)               (கண்ணதாசன் பதிப்பகம்)