Posts

Showing posts from December, 2021

எழில் விருத்தம்(கவிஞர் வாணிதாசன்)

_____________________________ எழில் விருத்தம் (கவிஞர் வாணிதாசன்) ______________________________         படிக்கும் அனைவரும் இன்புறத்தக்க எழில்மிக்க கவிதைகளை இனிய தமிழில் ஏற்றமுற பாடியவர்.. புரட்சிக்கவிஞரின் மதிப்புமிக்க மாணவர்..        இனிய, எளிய சொற்களின் மூலம் ஓசைநயம் மிக்க கவிதைகளை படைத்தவர்..      கற்பனை சிறப்பிற்கு உறுதுணை உவமை, உருவகம் போன்ற அணிகள்.கவிஞரின் கவிதைகளிள் இவை நிறைந்து ஒளிர்கின்றன. "காக்கைநிற நள்ளிரவே " "குளத்தினிலே தாமரைகள் தமிழ்மன்னர் கூட்டம் " "தைத்திங்கள் குளம்பூத்த பூவோ? விண்மீன் .. தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ? "ஒன்று கேட்பேன் கோட்டானைப் போல்  உனக்கு பகலில் கண் குருடோ? "        இதைப் போல பல சொற்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். வாசியுங்கள்!  "எழில் விருத்தம் " நம் மனதை மகிழ்விக்கும், மயக்கும் பூஞ்சோலை..               (விலை : ரூ 36)               (திருவள்ளுவர் பதிப்பகம்)

சாலப்பரிந்து(நாஞ்சில் நாடன்)

____________________________ சாலப்பரிந்து (நாஞ்சில் நாடன்) ____________________________       தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.ஒவ்வொரு கதையிலும் அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமானத் தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.       கற்பனையை மட்டும் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல.தொன்மையான ஒரு நிலத்தை, பண்பாட்டுச் செழுமையையும் விவரித்து எழுதப்பட்ட படைப்பு.      கதையைப் படிக்கும் போது அதிர்ச்சி, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், நகைச்சுவை, துணிச்சல் போன்ற உணர்ச்சிகளை இத்தொகுப்பில் காணலாம்.      ஆழமாகப் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.           (விலை : ரூ 250)            (காலச்சுவடு பதிப்பகம்)

சிறகை விரி, பற!(பாரதி பாஸ்கர்)

________________________________ சிறகை விரி, பற! (பாரதி பாஸ்கர்) _________________________________       பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள் எழுதிய இந்நூல் 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.        ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய, சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன.இவற்றில் ஆன்மீகம் சற்றே தூக்கலாக இருந்த போதிலும் அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அமைந்திருக்கின்றன.       சில சமூக அவலங்களைத் தனக்கே உரிய பாணியில் சாடி இருக்கும் அவர், "மகளிர் தினங்களைக் கொண்டாடலாம்.முதலில் மகளிரைக் கொண்டாடுவோம் " என்பன போன்ற பல நல்ல கருத்துகள் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டுவனவாக இருக்கின்றன.            (விலை : ரூ 130)            (கவிதா பப்ளிக்கேஷன்)

துயில்(எஸ். இராமகிருஷ்ணன்)

_______________________________ துயில் (எஸ். இராமகிருஷ்ணன்) ________________________________      உடம்பின் நோய்களுக்கும் மீட்சிக்கும் நடுவே மனிதமனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள் தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன.      நம்மைக் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறாத வரை, பிணியால் வரும் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மைதனை "துயில் "ஆழமாகச் சொல்கிறது.         இந்திய பாரம்பரிய மற்றும் மேல்நாட்டு சிகிட்சை முறைகள்,  நோய்கள், அது சார்ந்த மூட நம்பிக்கைகள், நோய் வந்த பிறகு உறவினர்களின் உதாசீனத்தால் ஏற்படும் மன உளைச்சல், தனிமைத் துன்பம் முதலியவற்றை காட்சிப்பூர்வமான தத்துவார்த்தத்தில், கவித்துவம் நிறைந்த இப்புதினத்தை அவசியம் அனைவரும் படிக்க வேண்டும். வாசிப்பை நேசிப்பவர்களையும், சுவாசிப்பவர்களையும்  யோசிக்க வைக்கும் நூல் இது.             (விலை : ரூ 525)              (தேசாந்திரி பதிப்பகம்)

பனி(ஓரான் பாரூக்)தமிழில்..ஜி.குப்புசாமி

______________________________ பனி (ஓரான் பாரூக்) தமிழில்..ஜி.குப்புசாமி _______________________________         ஆசிரியரின் படைப்புகளில் தனித்துவமான புதினம் "பனி " வெளிப்படையாக அரசியல் பேசும் புதினம் இது.       மதச்சார்புக்கும், சார்பின்மைக்கும் இடையிலான மோதலை துப்பறியும் கதை வேகத்துடன் சொல்கிறது இந்நூல்.      தனது படைப்புகளின் நிரந்தரக் களமான "புல் "நகரத்தை விட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைக் களமாக்கியிருக்கிறார் பாரூக்.      ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் "கா " வின் அனுபவங்களே இதன் கதை.       துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும், மானுட நிலையையும் நுட்பமாக முன் வைக்கும் படைப்பு.            (காலச்சுவடு பதிப்பகம்)

செவ்வாழை(அறிஞர் அண்ணா)

_________________________________ செவ்வாழை (அறிஞர் அண்ணா) _________________________________        ஆற்றல் மிக்க நடையில் அமைந்த அண்ணாவின் படைப்புகள் சமூக நலத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை விளக்குவன.அந்த வகையில் அமைந்தது "செவ்வாழை " சிறுகதை.       தன் வீட்டுக் கொல்லையில் வளர்ந்து வரும் செவ்வாழையை, பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான் செங்கோடன்.       பண்ணை பரந்தாமன் தனது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமர்சையாகக் கொண்டாட, செங்கோடனின் செவ்வாழை குலையை பண்ணையின் கணக்குப்பிள்ளை கைகாட்ட அது பண்ணையார் வீடு சென்றது.செங்கோடனின் பிள்ளைகள் ஏமாற்றமடைந்து கண்ணீர் விட்டனர்.      உழைப்புகேற்ற பலன் ஒவ்வொருவருக்கும் கிடைத்து விட்டால் சமூகச் சிக்கல்கள் தீர்க்கப்படும் என்பதை இக்கதையின் மூலம் அறியலாம்,📚            (விலை. : ரூ 40)            (சீதை பதிப்பகம்)

நமக்குள் சில கேள்விகள்(வெ.இறையன்பு)

________________________________ நமக்குள் சில கேள்விகள் (வெ.இறையன்பு) ________________________________        இறையன்பு அவர்கள் "ராணி " வார இதழில் 100 வாரங்கள் தனது கேள்விகளால் வேள்வி நடத்தினார்! அதில் ஒரு பகுதி "கேள்வியும் நானே, பதிலும் நானே " என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது!         இதன் மீதிப் பகுதி "நமக்குள் சில கேள்விகள் " என்ற தலைப்பில் இப்போது புத்தகமாகத் தொகுக்கப் பட்டுள்ளது!         தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், வாழ்வியல் சிந்தனைகள், நேர மேலாண்மை, மருத்துவம், ஆன்மீகம், அறிவியல் என பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதில் அளித்துள்ளார் இறையன்பு அவர்கள்!  அறிவு தாகத்தைத் தணிக்கும் கருத்துகள் கொண்ட நூல் இது! வாசிப்பை சுவாசிப்போம்! வாழ்வை வளமாக்குவோம்!!         (விலை _ ரூ 160)          (தினத்தந்தி பதிப்பகம்)

அல்லி(மு.வரதராசனார்)

_________________________________ அல்லி (மு.வரதராசனார்) __________________________________       வாசகர் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதினம்.ஆணின் தவறான ஒழுக்கத்தால் மேல்நிலைப் படிப்புடைய ஒரு பெண் துன்புறும் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டும் புதினம் இது.       உயர்ந்த குறிக்கோளுக்காக எளிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைக்கும் அல்லியும், எப்படியாவது வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் சுப்புரத்தினமும் திருமணம் செய்து கொள்கின்றனர்.      மருத்துவக் கல்லூரியில் ஆரம்பிக்கும் இக்கதை, காதலின் இயல்பை நாம் அறிவதற்குத் துணைபுரியும் கதையாக விரிகிறது.       பால்இயல் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்.             (விலை :ரூ 125)             (பாரி நிலையம்)

வெந்து தணிந்த காடுகள்(இந்திரா பார்த்தசாரதி)

________________________________ வெந்து தணிந்த காடுகள் (இந்திரா பார்த்தசாரதி) _________________________________          நிலம், நீர், காற்று, கேள்விகள் உயிர் வாழ்வதற்கு அத்தியாயம். கேள்விகளை எதிர்கொள்ள ஒரேவழி விவாதிப்பதுதான்.         வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு புதினம்.          உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களைப் படைத்து அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு நெருப்புப் பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்கியுள்ளார் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.                (விலை : ரூ 150)                (கிழக்கு பதிப்பகம்)

சப்தங்கள்(வைக்கம் முகமது பஷீர்)தமிழில்...குளச்சல் மு.யூசுப்

________________________________ சப்தங்கள் (வைக்கம் முகமது பஷீர்) தமிழில்...குளச்சல் மு.யூசுப் _________________________________         ஆசிரியரின் புகழ்பெற்ற இரண்டு குறு நாவல்கள் "சப்தங்கள் " "மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மகள் " இத்தொகுப்பில் உள்ளன.        ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறு நாவல்கள்.        இது ஒரு விளிம்பு நிலை உலகம். சப்தங்களில் இந்த உலகம் இருண்டது.அச்சுறுத்துகிறது. பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மக்கள் உள்ளனர்.       அடுத்து "மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மகளில் " அதே போன்ற மனிதர்கள் இடம் பெற்றிருந்தாலும் இந்த உலகம் ஒளிமயமானது.வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.      1950 ல் பஹீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை. இரண்டு கதைகளுமே வாழ்வின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடும் எளிய மக்களின் கதை.           (விலை: ரூ 90)           (காலச்சுவடு பதிப்பகம்)

வடிவுடை மாணிக்க மாலை(வள்ளலார்)பதிப்பாசிரியர்..வ. ஞானப்பிரகாசம்

________________________________ வடிவுடை மாணிக்க மாலை (வள்ளலார்) பதிப்பாசிரியர்..வ. ஞானப்பிரகாசம் __________________________________       திருவொற்றியூர் தொண்டை நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று.தேவார ஆசிரியர்கள் மூவராலும் பாடப் பெற்றது.      வள்ளற் பெருமான் இளமையில்  சென்னையில் இருந்த காலத்தில் 12 ஆம் வயது தொடங்கி 35 ஆம் வயது வரை , 23 ஆண்டுகள் நாளும் திருவொற்றியூர் சென்று வடிவுடையம்மனை வழிபட்டுப் பல பாமாலைகள் பாடி பரவசமடைந்தார்.        அவர் பாடி அணிவித்த பாமாலையே "வடிவுடை மாணிக்க மாலை ".ஒவ்வொரு பாடலும் "வடிவுடை மாணிக்கமே "என முடியும். திருவருட்பா இரண்டாம் திருமுறையில் 75 ஆம் தலைப்பாக அமைந்துள்ளது.       காப்பு செய்யுளும் பின் 101 பாடலுமாக கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த நூல் இது. "கடல்அமுதே! செங்கரும்பே! அருள்கற்பகக் கனியே! உடல் உயிரே! உயிருக்குள் உணர்வே! உணர்வுக்குள் ஒளியே! அடல் விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே! மடல்அவிழ் ஞானமலரே! வடிவுடை மாணிக்கமே!                 (விலை :...

நான் மலாலா(மலாலா யூசுப்சாய்)தமிழில்...பத்மஜா நாராயணன்

_________________________________ நான் மலாலா (மலாலா யூசுப்சாய்) தமிழில்...பத்மஜா நாராயணன் _________________________________       பெண்கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை.      பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தின் உருக்கமான கதை.  ஆண் குழந்தைகளே குடும்பத்தின் சொத்து என்று கருதும் சமூகத்தில் தன் பெண் குழந்தை மேல் அபரிமிதமான அன்பு கொண்ட பெற்றோரின் கதை.        தன் உரிமையான கல்விக்காகப் போராடிய ஒரு சிறுமியின் கதை. ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்றிய போது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள்.       யார் மலாலா என்று துப்பாக்கி ஏந்தியவன் கேட்ட போது வாய்மூடி அமைதியாக இல்லாமல் "நான் தான் மலாலா " என்று தைரியமாகக் கூறினாள்.      இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு குரலின் சக்தியே போதும் என்று எல்லோரையும் நம்ப வைக்கும் நூல் இது.            (விலை _ ரூ 356)            (காலச்சுவடு பதிப்பகம்)

புரிந்ததும் புரியாததும்(வெ.இறையன்பு)

_________________________________ புரிந்ததும் புரியாததும் (வெ.இறையன்பு) _________________________________       பல்வேறு பரிணாமங்களில் விலாசமான பார்வை செலுத்தி, புதுப்புது செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வைக்கிறார் இறையன்பு அவர்கள். தெளிவு பெற வைக்கிறார்.      மனமெல்லாம் மகிழ்ச்சி, பகட்டும் எளிமையும், திருமண பந்தம், நயத்தகு நாகரிகம், பெருந்தன்மை பேணுவோம், வெற்றி நிச்சயம் என்பன போன்ற பத்து தலைப்புகளில் உயர்ந்த கருத்துகளை உலகியல் ரீதியாகவும், உளவியல் பூர்வமாகவும் எடுத்து வைக்கிறார்.       "மகிழ்ச்சியின் அளவுகோலை மனமே நிர்ணகிக்கிறது " "எது அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அது பகட்டு தான் " "பகிர்தல் மட்டுமே உறவை பலப்படுத்தும் " என்பன போன்ற சிந்தனைச் சிதறல்களை நூல் முழுக்கக் காணலாம்.            (விலை : ரூ 200)            (கற்பகம் புத்தகாலயம்)