Posts

Showing posts from February, 2022

இடக்கை(எஸ்.ராமகிருஷ்ணன்)

___________________________________ இடக்கை (எஸ்.ராமகிருஷ்ணன்) ____________________________________          17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டு எழுதப்பட்ட புதினம்.        இப்புதினத்தில் 45 அங்கங்கள்..ஒவ்வொன்றிலும் பல கதைகள் ..உபகதைகள்... அவற்றில் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகின்றன.சில முடிச்சவிழாத புதிர்களாகி விடுகின்றன.அக்கதைகள் ஊடாக வாழ்க்கைத்துவம் மிளிர்கிறது.        இப்புதினத்தில் எஸ்.ரா அவர்கள் 2 பக்கங்ளை சித்தரிக்கிறார்.மன்னர் பரம்பரைக்குள் நிகழும் காட்சிகள் ..சதிகள், ஆணவம், அதிகார மமதை, சந்தேகப்படும் இயல்பு.. மறுபுறத்தில்அடிமை நிலை மக்களின் இயல்புகள், அவர்களின் அறியாமை, தனிமை, இயலாமை, ஏழ்மை, ஏமாற்றம், துன்பம்...         நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் இருப்பினும் ஔரங்கசீப்பின் அந்தரங்கப் பணிப்பெண்களில் ஒருத்தியான "அஜ்யா பேகம் " என்ற அரவாணியும், கைதியாக தண்டனை அனுபவித்து தப்பி ஓடும் "தூமக்கேது " வும் அந்நியன் "ரெமியல் " ஆகியோருடன் பாத...

பெண் மனம்(லட்சுமி)

_____________________________ பெண் மனம் (லட்சுமி) ______________________________        " பெண் மனம் " ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான உள்ளங்களைப் பரவசப்படுத்தியது.         இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின மகளிர் மாண்புகளைக் கூற கண்ணகியைப் படைத்தார் இளங்கோ.        இருபதாம் நூற்றாண்டு ஆண்களோடு சமமாக வாழும் பெண்ணினத்தின் மனநிலையைப் புரிய வைத்துப் பெருமை சேர்க்க இப்புதினத்தில் சந்திரா என்ற கதாப்பாத்திரத்தைப் படைத்துள்ளார் ஆசிரியர்.        இப்புதினம் " இருவர் உள்ளம் " என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து வெற்றி வாகை சூடியது.         1962 ஆம் ஆண்டு, சென்னை மாநில அரசால் பரிசளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்நூல்.                  (விலை : ரூ 130)                  (பூங்கொடி பதிப்பகம்)

ரோமாபுரிப் பாண்டியன்(முத்தமிழ் அறிஞர் கலைஞர்)

_________________________ ரோமாபுரிப் பாண்டியன் (முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்) _________________________       முதலில் முரசொலியிலும், பின்பு குமுதம் இதழிலும் தொடராக வெளிவந்தது!      கதையின் காலம் கி.மு 30 லிருந்து கி.மு 20வரை!       பாண்டியப் பேரரசன் ஒருவன் தனது தூதுவனை ரோமாபுரிக்கு அனுப்பினான் என்ற வரலாற்றுக் குறிப்பினைக் கொண்டு அதனைச் சுற்றி இப்புதினம் பின்னப்பட்டுள்ளது!      வரலாற்றுப் பாத்திரங்களும், கற்பனைப் பாத்திரங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன!      அந்தக் கால நாகரிகம், ஆடை அணிகலன்கள், சமூகப் பொருளாதார நிலை என்று பல செய்திகள் கொட்டிக் கிடக்கின்ற கருத்துக் கருவூலம் இந்நூல்!        ரோம்நகரின் அழகு,கலைஞரின் ஒப்புமைகள் ஆகியவை படிப்பவர்களின் மனதைக் கவர்திழுக்கும் வல்லமை கொண்டவை! 📚           (பாரதி பதிப்பகம்)

சிந்தித்த வேளையில்(திரு.சைலேந்திர பாபு I P S)

________________________ சிந்தித்த வேளையில் (திரு.சைலேந்திர பாபு I P S) _________________________          பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திர பாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன!      நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை எழுதியுள்ளார்! 📚        (சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்)

பல்லவன் கனவு(பா.மோகன்)

_________________________ பல்லவன் கனவு (பா.மோகன்) _________________________       பல்லவமன்னன் ஒரு கனவு கண்டான்! அது மாமல்லபுரம்! அவன் காலத்தில் அக்கனவு முழுமையாக நிறைவேறவில்லை!       மகேந்திரவர்மன் சமணாக இருந்த போது அவன் பெயர் "குணபரன் " என்றும், சைவனாக மாறிய பிறகு மகேந்திரவர்மன் என்று பெயர் மாற்றப்பட்டதும், திருநாவுக்கரர் அவனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியதும் வரலாறு!     எல்லா செய்திகளும் மொத்தமாக "பல்லவன் கனவு " என்ற புதினமாக உருபெற்றுள்ளது! 📚         (சீதை பதிப்பகம்)

வழித்தடங்கள்(தொ.பரமசிவம்)

_________________________________ வழித்தடங்கள் (தொ.பரமசிவம்) _________________________________         பல்வேறு ஆய்வுகள் மூலம் பல அறியப்படாத நிகழ்வுகளை இந்நூல் மூலம் அறியச் செய்திருக்கிறார்.         16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.பல்வேறு காலச்சூழலில் பல கருத்தரங்குகளிலும், இதழ்களிலும் வெளிவந்தவை.        "சங்க காலம் ஒரு மதிப்பீடு " "சங்க இலக்கியத்தில் சமூகவியல் ஆய்வுகள் " போன்ற கட்டுரைகள் சங்க இலக்கியம் பற்றிய கருத்துகளைக் கூறுவனவாக உள்ளன."பாரதியின் கனவும் இன்றைய நிகழ்வும் " கட்டுரை பலரையும் யோசிக்க வைக்கும்.          "கள ஆய்வும் இலக்கிய வாசிப்பும் "என்னும் பகுதியில் களஆய்வு என்பது மண் வாசிப்பும், மனித வாசிப்பும் கலந்த ஒன்று என்கிறார்.வாசியுங்கள். அருமையான புத்தகம்..                (விலை : ரூ 70)                (யாதுமாகி பதிப்பகம்)

பாற்கடல்(லா.ச.ராமாமிருதம்)

__________________________________ பாற்கடல் (லா.ச.ராமாமிருதம்) ___________________________________        தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக 20 தலைப்புகளில் வடித்துக் கொடுத்திருக்கிறார் லா.ச.ரா..         தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசாபாசங்கள் ,எந்த அளவிற்கு இருந்தது .. எந்தெந்த கோணங்களில் முன்னேறி இருக்கிறோம் என்பதைச் சொல்லி, தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை எந்த அளவு பாதித்தன என்பதையும் இலக்கிய அனுபவத்தையும் "அமுதசுரபி " பத்திரிகை மூலம் பகிர்ந்து கொண்டதைத் தொகுத்து நூல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.          இப்பாற்கடலில் அமுதத் துளிகளை அள்ளிப் பருகுங்கள்.. ஆனந்தம் கொள்வீர்கள்..                     (விலை : ரூ 290)                     (சாரு பதிப்பகம்)

இலக்கியத்தேடல்(ச.ஈஸ்வரன்)

_________________________ இலக்கியத்தேடல் (ச.ஈஸ்வரன்) _________________________        மனிதப் பிறவிகளுக்கு மாண்புடையது இலக்கியக்கல்வி!      வாழ்வின் இலக்கினை இயம்புவதும் வரலாற்றுச் சிறப்பின் நிகழ்விடமாகத் திகழ்வதும் நாகரிகத்தின் நிலைக்களனாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும் என்றும் நிலைத்து நிற்பது இலக்கியம்!     "நிகழ்கால வாழ்வு சிறக்க, எதிர்கால வாழ்வு செழிக்க, கடந்தகால இலக்கியங்கள் நினைவூட்டப் படவேண்டியது இன்றியமையாததாகிறது!       இலக்கியத்தேடல் என்னும் இந்நூலில் 27 ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன!       படிப்பவரை இக்கட்டுரைகள் முடிவில்லாத ஆய்வுலகத்திற்குச் சிறிதேனும் அழைத்துச் செல்லும் என்பது உறுதி! 📚

கறங்கு(நாஞ்சில் நாடன்)

____________________________ கறங்கு (நாஞ்சில் நாடன்) ____________________________         "கறங்கு " என்னும் சொலை இலக்கியங்களில் காணலாம். கறங்கு எனில் சுழற்சி, சுழல்தல் என்று பொருள்.        "தொல் குடி " தொகுப்புக்குப் பிறகு 2018 முடிய ஆசிரியர் எழுதிய 12 கதைகளும், கறங்கு என்னும் தொகுப்பாகிறது.        சமகால நடப்புகளின்மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும், கோபத்தையும், கையாலாகாத தன்மையால் தன் மீதான கழிவிரக்கத்தையும் எள்ளலும், சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கிறார் ஆசிரியர் இக்கதைகள் மூலம்.                (விலை : ரூ 90)                (தமிழினி பதிப்பகம்)

மன்னர் மகள்(சாண்டில்யன்)

_____________________________ மன்னர் மகள் (சாண்டில்யன்) _____________________________         72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்த வரலாற்றுப் புதினம் இது.        11 நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் ஆட்சிப் பின்னணியில், கங்கையை நோக்கிய படையெடுப்பு மற்றும் வேங்கி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை மையமாகக் கொண்ட புதினம்.       பல சரித்திர புதினங்களிலிருந்து சற்று மாறுபாடு கொண்ட புதினம். கற்பனை நயம் மிக்கது.      சிந்தனையையும், மதி நுட்பத்தையும் பற்றிய  விவரிப்புகளுமாக புத்தகப் பிரியர்களுக்கு சிறந்த நூல் இது.              (விலை : ரூ 400)               (வானதி பதிப்பகம்)

ரோமாபுரி ராணிகள்(அறிஞர் அண்ணா)

______________________________ ரோமாபுரி ராணிகள் (அறிஞர் அண்ணா) _______________________________        இந்நூலில் சுமார் 15 கட்டுரைகள் உள்ளன.இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் ரோம் சாம்ராஜியத்தின் வெற்றிக்கொடி ஒரு காலத்தில் கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது.        ரோம் நாட்டு வீரர்களின் குதிரைப்படையின் குளம்புகளின்கீழ் சிக்கிச் சிதைந்தவர்கள் எண்ணற்றவர்கள்.        வீரத்தின் விளைநிலமான ரோமாபுரியில், ரோமாபுரி ராணிகள் பலர் (பாம்பேயா, லிவியா, புல்வியா, பாஸ்டினா, ஜீலியா...) போன்ற பலர் ஆடம்பர வாழ்விலும், சிற்றின்பத்திலும் ஈடுபட்டு அப்பதவிக்கு ஊறுவிளைவித்தனர்.நல்ல குணம் கொண்ட ராணிகளும் இருந்தனர்.       இவர்களின் குணாதிசயங்களை அண்ணா அவர்கள் தமக்கே உரித்தான அழகிய நடையில் சொல்லியிருக்கிறார்.அண்ணாவின் எழுத்துகள் கற்போர் நெஞ்சை கவரக்கூடியவை.இந்நூலும் இதற்கு விதிவிலக்கல்ல.ரோம் வரலாற்றை அறிந்து கொள்ள வைக்கும் அற்புதமான நூல்..                   (விலை : ரூ 80)  ...

கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்(தியாகு)

_________________________________ கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் (தியாகு) __________________________________       கியூபாவில் கல்வி என்பது பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை.இங்கு உயர் படிப்பு வரையிலும் அரசாங்கத்திற்கே முழுப் பொறுப்பு.        கியூபாவின் வீரத்தலைவர்கள் பிடல்காஸ்ட்ரோ, செகுவாரா தலைமையில் அந்நாட்டின் புரட்சிக்கொடி ஏற்றப்பட்ட மூன்றே ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு எட்டப்பட்டது.         மாணவரும், படித்த இளைஞர்களும் பட்டி, தொட்டி, காடு, மலை, வயல் என நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று எழுத்தறிவு பணிமேற்கொண்டு இந்த இலக்கு எட்டப்பட்டது.          அனைவருக்கும் கல்வி இலவசம், அறிவியலோடு அறவியலையும் புகட்டும் தரமான கல்வி, உயிர் காக்கும் மருத்துவக் கல்வி, சிறந்த ஆசிரியப் பயிற்சி... கல்வித் துறையில் இப்படி ஒவ்வொரு வகையிலும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது கியூபா.       கியூபாவின் கல்விப் புரட்சியினை விவரிக்கும் இந்நூல் காலத்தின் கட்டாயம்.  கியூபாவைப் ...

கடலுக்கு அப்பால்(ப.சிங்காரம்)

_______________________________ கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம்) _______________________________        தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப் போட்ட உலகப் போரின் பின்புலத்தில் ப.சிங்காரம் அவர்கள் சொல்லியுள்ள கதையான "கடலுக்கு அப்பால் " புதினம் பல புதிய தேசங்களை அறிமுகப்படுத்துகிறது.        மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லை.மனதில் நம்பிக்கை இழக்காத வரையில் நாம் எதையுமே இழப்பதில்லை என்ற தேறுதலுடன் முடியும் புதினத்தின் நிறைவு வரிகள் தான், ஆசிரியர் சொல்ல விழைவதாக இருக்கலாம்.                  (விலை : ரூ 160)                  ( டிஸ்கவரி புக் பேலஸ்)

எழுபெரும் வள்ளல்கள்(கி.வா.ஜகநாதன்)

______________________________ எழுபெரும் வள்ளல்கள் (கி.வா.ஜகநாதன்) ______________________________        "ஈவார்மேல் நிற்கும் புகழ் " என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெருமக்களை வள்ளல்கள் என்று அழைப்பர்.       பாரி, பேகன், அதியமான், காரி, ஓரி, ஆய், நள்ளி என்று ஏழு பெரும் வள்ளல்களை இலக்கியங்களின் வழியே அடையாளம் காட்டினர் நம் முன்னோர்கள்.       பழைய நூல்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டு ஒருவாறு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி, ஏழு வள்ளல்களின் வரலாற்றை சுருக்கமாக இந்நூலில் எழுதியுள்ளார் கி.வா.ஜ அவர்கள்.       சிறுவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்.               (விலை : ரூ 50)               (மங்கை வெளியீடு)

அன்பளிப்பு(கு.அழகிரிசாமி)

_________________________ அன்பளிப்பு (கு.அழகிரிசாமி) _________________________       குழந்தைகள் உலகின் ஆசாபாசங்கள், சந்தோசங்கள் குறித்துச் சொல்லும் இந்தப் படைப்பாளி, நம்மை அந்த அதிசய உலகத்தினுள் எட்டிப் பார்க்க வைக்கிறார், " அன்பளிப்பு " என்ற சிறுகதை மூலம்!        "அன்பளிப்பு "முதல் "கல்மாண கிருஷ்ணன்" ஈறாக 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.        இந்நூலைப் படிக்கும்போது இது கதை என்ற உணர்வு வருவதில்லை! நம் நண்பர்கள், நம்  சொந்தங்கள், நம் அக்கம்பக்கம் உள்ளோர் ஆகியவர்களைப் பற்றியே படிப்பதாகத் தோன்றும் அற்புதமான சிறுகதைத் தொகுப்பு!       1970 இல் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது! 📚                   (விலை : ரூ 50)                   (தேன்மழைப் பதிப்பகம்)

முசோலினி(சாமிநாத சர்மா)

_________________________ முசோலினி (சாமிநாத சர்மா) _________________________      முசோலினி ஒரு சரித்திர நாயகன்! சோர்வினால் உறங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்திற்கு தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்துகளை உட்புகுத்தி அந்தச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ததோடு, மற்ற சமூகங்களுக்கு எதிரே தோள் தட்டவும் செய்வித்தவன்!       இந்நூலில் முசோலினியின் வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமே ஒருவாறு தெரியும்! அவன் தோற்றுவித்த பாசிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் காரணமாக இத்தாலியில் உண்டான மாற்றங்கள் முதலியன பட்டும் படாததுமாகவே தெரியும்! 📚        (ராமையா பதிப்பகம்)

தோல்(டி.செல்வராஜ்)

_________________________ தோல் (டி.செல்வராஜ்) _________________________       திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் நூல் இது!       இது ஒரு சோசலிச எதார்த்தவாத நூலாக புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளது!         ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், புதுமை உணர்வு பெற்று ஒன்றிணைந்து போராடி  வெற்றி பெறுவது புதினத்தின் மையக் கருத்தாகும்!      21 ஆம் நூற்றாண்டில் எதார்த்தவாதம் வீறுடன் மறுஎழுச்சி பெற்றமைக்கு இப்புதினம் சிறந்த சான்று! 📚        (நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்)

(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்...கௌரி பிரபாகரன்)

_______________________________ (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி பிரபாகரன்)  ________________________________        பிரபல தெலுங்கு வாரப் பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்து, பிறகு நாவலாக வெளிவந்த நூல் இது.        கதாநாயகன் பிரஹஸித் டென்னீஸ் விளையாட்டு வீரன்.அவனால் நேசிக்கப்பட்ட பெண் லட்சுமி ..திருமணமானவள்.. வாழ்க்கையில் வெறுமை..பொங்கி வரும் எழுத்தார்வம் அவளைப் படைப்பாளியாக்குகிறது.         ஆண்டாண்டு காலமாய்ப் பழக்க ரீதியில் பின்பற்றி வந்த நெறிமுறைகள், கோட்பாடுகள் ஒதுக்கித் தள்ளப்படுவதை இப்புதினத்தில் காணலாம்.       பத்திரிகை துறையில் ஈடுபாடு கொண்ட மதுரா, மநோவசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் ராஜீ, தண்டனைக்குச் சிக்காமல் திறமையாகக் குற்றங்களைச் செய்து வரும் டாக்டர் விசால், அநியாயத்தை எதிர்த்துப் போராடி கால்களை இழந்த லாயர் சிவசங்கரன் இவர்கள் முற்றிலும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல.       குடும்ப வாழ்க்கையில் வெறுமை குடிபுகுந்தால், அதைப் போக்கிக் கொள்ள கணவனுக்கும், மனைவிக்கும் இடையே பேச்...

அகம் புறம்(வண்ணதாசன்)

____________________________ அகம் புறம் (வண்ணதாசன்) _____________________________         இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் அழகியல் முக்கியம் என நாம் உணர்ந்து கொண்ட போதும், ஊர்ந்து கொண்டு செல்லும் வாழ்க்கையில் நிகழ்வுகளுக்கு இடையில் ஒளிந்திருக்கும் அழகியலை தன் எழுத்து மூலம் தீட்டியுள்ளார்.         தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் முகங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.         வசீகரமான தமிழ்நடையில் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள் பற்றி மண் வாசத்தோடு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள், வாசிப்பவரைக் கவர்ந்திழுக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.                 (விலை : ரூ150)                 (சந்தியா பதிப்பகம்) நட்புடன்.. சு.வளர்நிலா..

இலக்கியச் சோலை (அறிஞர் அண்ணா)

_________________________ இலக்கியச் சோலை  (அறிஞர் அண்ணா) _________________________       பழந்தமிழகம் செய்தியால் விரிந்ததாகவும், சிறப்பால் ஆழ்ந்ததாகவும், வரலாற்றுச் சான்றுகள் எட்ட முடியாத அளவு உயர்ந்ததாகவும் விளங்குகின்றது!        பழந்தமிழர் மக்களைக் காண அறிஞர் அண்ணா அவர்கள் புறநானூறு, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், திருக்குறள், முல்லைப்பாட்டு ஆகிய சங்க கால நூல்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இந்நூலின் மூலமாக!      இலக்கியச்சோலையில் புகும் நாம், அவர் காட்டும் வழியினை _ நெறியினை போற்றிப் புகழ்வதோடு, நடைமுறையில் கொண்டு, நம் வாழ்வினை விழுப்பம் உடையதாக ஆக்கிக் கொள்வோம்!       இந்நூலில் பன்னிரெண்டு கட்டுரைகள் உள்ளன! அத்தனையும் முத்துகள்!       அனைவரும் அண்ணாவின் இலக்கியச்சோலையில் புகுந்து, இலக்கியச் சுவையை பருகவேண்டும்! 📚   (பூம்புகார் பதிப்பகம்)

அன்பே ஆரமுதே(தி.ஜானகிராமன்)

______________________________ அன்பே ஆரமுதே (தி.ஜானகிராமன்) _______________________________          தி.ஜ வின் புதினங்களில் மிகவும் ஜனரஞ்சகமானது.கதையோட்டத்தில் நிகழும் நிகழ்வுகள் எதிர்பாரா சுவாரஸ்சியத்தைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம்.        ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவு கொண்டு ஓடுகிறார்.சந்நியாசியாக அலைகிறார்.முப்பதாண்டுகளுக்குப் பின் அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார்.       இந்தக் காலஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும், உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது இப்புதினம்.       இளமையில் விலகிப் போன இருவர் முதுமையில் தம்பதியராகவும், பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் இருக்கும் அதிசயமே கதையின் மையம்.             (விலை : ரூ 150)             (ஐந்திணை பதிப்பகம்) நட்புடன்...  சு.வளர்நிலா

பகத்சிங்(பட்டத்தி மைந்தன்)

_____________________________ பகத்சிங் (பட்டத்தி மைந்தன்) _____________________________       அந்நியருக்கு அடிமைப்பட்டு பாரதம் இருந்த போது, விடுதலைக்காகப் போராடி தம்தம் வாழ்க்கையைத் தியாகம் செய்த பலரில் ஒருவர் "பகத்சிங் ".       "நாட்டபிமானம் உள்முட்டிய சினத்தீ  யன்றோ வானோர்க்கு என்றுமே உவப்பு " என்னும் மனோன்மணியக் கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.       பகத்சிங்குடன் சுகதேவ், இராஜகுரு ஆகிய இருவரும் சேர்த்துக் தூக்கிலிடப்பட்ட செய்திகளை இந்நூல் சிறப்புற விளக்குகிறது.        வரலாற்று நிகழ்வுகளை முறைப்படி அமைத்துள்ளார் ஆசிரியர்.                (விலை : ரூ 100)               (ராமையா பதிப்பகம்) நட்புடன்.. சு.வளர்நிலா..