Posts

Showing posts from August, 2021

கோபுர தீபம்(நா.பார்த்தசாரதி)

_________________________ கோபுர தீபம் (நா.பார்த்தசாரதி) _________________________      ஆசிரியரின் முதல் படைப்பு! சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்புதினத்தைப் படைத்துள்ளார்!      திருநெல்வேலி மாவட்டமே கதை நிகழும் இடமாகக் கொண்டுள்ளதால் அந்தப் பகுதிகளைப் பற்றிய அறிமுகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது!      ஆசிரியரின் இலக்கிய அறிவும், அவர் பாரதி மீது கொண்ட தீராத பற்றும் கதை முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது!      நடையில் எளிமையும், கதையோட்டத்தில் விறுவிறுப்பும் உள்ளவாறு கதையைப் படைத்துள்ளார்!     தனது உயரிய கருத்துகள் மூலம் விடுதலைப் போராட்ட காலத்தை நம் கண்முன் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நா.பா. அவர்கள்!  அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான நூல்! 📚        (சீதை பதிப்பகம்)

வெற்றி வெளியே இல்லை(த.இராமலிங்கம்)

______________________________ வெற்றி வெளியே இல்லை (த.இராமலிங்கம்) ______________________________          இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்க வரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ள நூல் இது.         நம்முடைய ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என மனித சமூகம் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்நூல்.        "இருட்டை விரட்டும் வெளிச்சம் " "உழைக்காமல் வருமா உயர்வு " "திட்டமிட்டால் வெற்றி உறுதி "  "நிற்க அதற்குத் தக " என  அத்தியாயங்கள் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.                   (விலை : ரூ 115)                   (விகடன் பிரசுரம்)

நந்நவனத்து நட்சத்திரங்கள் - பா.விஜய்

____________________________ நந்நவனத்து நட்சத்திரங்கள் (பா.விஜய்) _____________________________        காதல் ஜபங்கள் தொடங்கி கற்றுக் கொள்! ஈறாக சுமார் 26 புதுக் கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.        "என் கிராமம் " கவிதை .. வாசிக்கும் ஒவ்வொருக்கும் பால்ய கால நினைவுகள் தம் நினைவடுக்குகளில் தோன்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.       விவசாயி விடுதியில் தங்கியுள்ள தன் மகனுக்கு எழுதிய கடிதமாக (விதை விழுந்த இடம்) கவிதை, கண்ணில் நீரை வரவிக்கும்.        தற்கொலையின் விளிம்பில் நிற்பவனைப் பார்த்து சொல்லப்பட்ட (விதையில் இருக்கிறது விருட்ஷம்) கவிதை அருமை.. "தங்கத்திற்குத் தரப்படும் மதிப்பு தனக்கில்லையென்று இரும்பு இளைத்துப் போவதில்லை " "நீ பூக்களின் மேல் நடக்க ஆசைப்பட்டால் கண்ணாடியின் மேல் நடக்க உன்னுடைய கால்கள் தயாராகட்டும் " எல்லா கவிதைகளும் படித்து சிந்திக்கத்தக்கவை.. போற்றத்தக்கவை..                (விலை : ரூ 100)                (குமரன் பதிப்பகம்)

செயலும் செயல்திறனும்(பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

______________________________ செயலும் செயல்திறனும் (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) _______________________________         மனிதர்களில் பலர், தாங்கள் எப்படிப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும், எவ்வெவ்வாறு செய்ய வேண்டும் என்பன போன்றவற்றைச் சிந்திக்காமல் - ஆழ எண்ணாமல் - தாங்கள் விரும்புகின்ற செயல்களில் மனம் போனபடி எல்லாம் செயல்பட்டு அல்லல் படுகின்றனர்.         ஐயா அவர்கள் எதிர்காலத் தலைமுறையினரான இளையோர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சிறார் இதழான "தமிழ்ச்சிட்டில் " கட்டுரைகளாக.. 56 தொடர்களாக ..1980 முதல் 1987 வரை எழுதி வந்தார். அதன் தொகுப்பே இந்நூல்.      இளைய சமுதாயத்தினர், ஒவ்வொருவரும் இதனை வாழ்வியல் வழிகாட்டி நூலாகக் கொண்டு, வாசித்து வந்தால் வாழ்வில் உயரலாம் என்பதில் இருவேறு கருத்தில்லை.             (விலை : ரூ 90)             (தென்மொழி வெளியீட்டகம்)

நாகலிங்க மரம்(தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)ஆர்.சூடாமணி

_________________________ நாகலிங்க மரம் (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) ஆர்.சூடாமணி _________________________      எளிமையும், கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை!      இவர் கதைகளின் பிரதான அம்சங்கள், அவற்றின் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்!       இவ்வுலகம் நிம்மதியைக் குலைத்துவிடும் பேரழகுகளால் மட்டும் அல்ல! மனம் விரும்பும் சிறு சிறு சுமாரான அழகுகளாலும் கூடத்தான் நிரம்பியுள்ளது!      இந்த எளிய, ஆனால் மதிப்புமிக்க, உண்மையைத் தம் எழுத்துகளின் மூலமும், வாழ்க்கையின் மூலமும் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி அவர்கள்!  இச்சிறுகதைகள், கதை படிப்பது போல் அல்லாமல் நம்முடைய வாழ்க்கையை ஞாபகப் படுத்தும் ஓர் கருவியாக உள்ளன! 📚        (அடையாளம் பதிப்பகம்)

தெரிந்து கொள்வோம்! தெளிவு பெறுவோம்! - க.சாந்தகுமாரி

_________________________ தெரிந்து கொள்வோம்! தெளிவு பெறுவோம்! (க.சாந்தகுமாரி) _________________________       இயற்கை என்பது அண்டத்தின் பிரதிபலிப்பு!       பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாமலும், பூமியின் மேற்பகுதியில் கண்ணுக்குக் காட்சிப் பொருளாகவும், அண்டவெளியில் நுண்பொருளாகவும் அமைந்து உலகத்தை இயக்கி வரும் உன்னதமே இயற்கை!       உயிரினங்களின் தோற்றம், அவற்றின் இயக்கம், அண்டவெளியின் சுழற்சி, அங்கே அடங்கிக் கிடக்கும் அற்புத ஆற்றல்கள், புவியின் தோற்றம், இயக்கம், சூரியனின் விந்தைமிகு ஆற்றல்கள் என அனைத்து நிலையிலும் அடங்கிக் கிடக்கும் ஆற்றல்களைத் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஆசிரியர் மிகச்சிறந்த அறிவியல் நூலாகத் வழங்கியிருக்கிறார்! மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது! 📚           (மங்கை வெளியீடு)

இராஜ ராஜ சோழன் - மதன்

_________________________ இராஜ ராஜ சோழன் (மதன்) _________________________      இராஜ ராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப்படுகிறது!       வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்தவராகக் கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை காட்டிய பேரரசராகவும் நினைவுகூறப் படுகிறார்!      இலங்கை, மாலத்தீவு வரை வெற்றி பெற்றார்!      காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சை பெரிய கோயில் இவர் காலத்தில் கட்டப்பட்டது!      கலை, ஆட்சிமுறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று இம்மன்னனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம்! மொத்தத்தில் இவர் காலம் பொற்காலம்! இராஜராஜனின் சிறப்புகளைத் தொகுத்துக் கூறும் அற்புதமான நூல் இது! 📚          (கிழக்கு பதிப்பகம்)

திருவருட் பிரகாச வள்ளலார் - புலவர்.என்.வி.கலைமணி

_________________________ திருவருட் பிரகாச வள்ளலார்  (புலவர்.என்.வி.கலைமணி) _________________________       மனிதர்கள் புனிதர்களாக வாழ வழிகாட்டிய சான்றோர்கள் பலராவர்!       அண்மைக்காலத்தில் தோன்றி அரிய சாதனைகள் படைத்த மாமனிதர் வள்ளலார்!       ஜீவகாருண்யம் என்பது அவருடைய உயிர்க் கொள்கை! அவருடைய படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன!      வெள்ளாடைத் துறவியாக வாழ்ந்த வள்ளலாரின் வாழ்க்கையைத் "திருவருட் பிரகாச வள்ளலார் " என்னும் நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளார் திரு.கலைமணி அவர்கள்! இந்நூலில் 23 கட்டுரைகள் உள்ளன! வள்ளலார் பற்றிய பல அரிய செய்திகளின் தொகுப்பு இந்நூல்!📚          (ராமையா பதிப்பகம்)

ஆயிரங்கால் மண்டபம் - ஜெயமோகன்

_________________________ ஆயிரங்கால் மண்டபம் (ஜெயமோகன்) _________________________        இந்நூல் சிறுகதைகளின் தொகுப்பு! பல களங்களில் எழுதப்பட்டவை!        எளிய கதையமைப்பைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், தேவகி சித்தியின் டைரி, நைனிடால் தாண்டவம் போன்ற சிறுகதைகள் அனைவரையும் கவரும்!        நாகம், வெள்ளம், ஒன்றுமில்லை போன்ற சிறுகதைகள் ஏற்படுத்தும் மன எழுச்சியைத் தவிர்க்க முடியாது! 📚         (அகரம் பதிப்பகம்)

ஆயுதம் செய்வோம் - என்.மாதவன்

_____________________________ ஆயுதம் செய்வோம் (என்.மாதவன்) _____________________________       இந்நூல் "திருப்தியான தேர்வு " "வெளிச்சத்துக்கு வராத வேர்கள் " உள்பட 7 சிறுகதைகளின் தொகுப்பு.துளிர், வண்ணக்கதிர் போன்ற வெவ்வேறு இதழ்களில் வெளிவந்தவை.       இக்கதைகள் வகுப்பறை சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை.      ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை.. மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்க்கும் முறை.. தேர்வுகள் ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறனை சோதிப்பதாக அமைய வேண்டும் என்பதையும்., எதையும் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களுக்கு நல்லது செய்யும் ஆசிரியர்கள் பற்றியும் ..வகுப்பறையில் நிகழும் சம்பவங்களை உற்று நோக்கி ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட அற்புதமான புத்தகம்.       கல்வி சார்ந்த கருத்துகளைக் கொண்ட இந்நூலினை வாசிப்பதன் மூலம் மாணவர்களை இன்னும் புரிந்து கொண்டு, நமது வகுப்பறையை உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மாற்றலாம்..                   (விலை : ரூ 35)                 ...

இளந்திரையன் கவிதைகள் - சாலை இளந்திரையன்

____________________________ இளந்திரையன் கவிதைகள் (சாலை இளந்திரையன்)  ____________________________      தமிழகத்தின் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளில் சிலவற்றின் தொகுப்பே இந்நூல். சுமார் 128 கவிதைகள் உள்ளன.வாழ்த்து, இயற்கை, அன்பு வாழ்க்கை, குமுறல், மலர்த்தோட்டம் என்ற தலைப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.         இவர் கவிதைகள்.. எண்ணத்தின் பண்.. இதயத்தின் இசை.. உணர்வின் வடிவம்.. உண்மையின் உருவம்..         பல்சுவைப் பாடல்கள் பரவிக் கிடக்கும் நூல்..அவற்றில் சில கள்..சில கனித்தேன்..சில பால்..சில பாகு... பகலவன் வரவால் தாமரையின் செயல்..      " சோம்பல் முறித்தது தாமரை                 சுந்தரப்பள்ளி         எழுச்சி இசைத்தது நீரலை " எல்லா பாடல்களுமே இணையில்லாச் சுவை மிக்கவை .அதை வாசிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள்.      (யுனிவர்ஸல் பிரிண்டிங் ஹவுஸ்)

கேள்வியும் நானே.. பதிலும் நானே . - வெ.இறையன்பு

_________________________ கேள்வியும் நானே.. பதிலும் நானே .. (வெ.இறையன்பு) _________________________      ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்!  இறையன்பு அவர்களின் புதுமுயற்சி இந்நூல்!       அவரே கேள்வி கேட்டு அவரே பதில் அளித்துள்ளார்! கேள்விகளால் ஒரு அறிவு வேள்வியை நடத்தியுள்ளார்!      இந்நூல் வாசகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது! மாணவர்களின் மனதில் தெளிவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது!      புதிய தகவல்களையும், விளக்கங்களையும் எடுத்துக்கூறி அறிவை மிளிர வைக்கிறது! அரிய தகவல் பெட்டகம் இந்நூல்! 📚         (தினத்தந்தி பதிப்பகம்)

பேச்சரவம் கேட்டிலையோ...தமிழச்சி தங்கபாண்டியன்

_________________________ பேச்சரவம் கேட்டிலையோ... (தமிழச்சி தங்கபாண்டியன்) _________________________       ஆசிரியரின் பல்வேறு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்!       கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராக பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன் வைக்கிறார்!       விவாதங்களைத் திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும், தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் இவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன!      மனத்தெளிவும், நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுக்களின் வழியே தமிழச்சி அவர்கள் ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார்! வாசிப்பவரை வசப்படுத்தும் நூல் இது! 📚

பெண் ஏன் அடிமையானாள் - தந்தை பெரியார்

______________________________ பெண் ஏன் அடிமையானாள்  (தந்தை பெரியார்) ______________________________       உலக ஜனத்தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகிற்கு, சமுதாயத்தில்.. கைம்மை, சொத்துரிமை இன்மை, கல்வி மறுத்தல் முதலிய கட்டுப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.          மூடநம்பிக்கையில் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும், வருங்கால மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாய் இருக்கும் இப்பிரச்சனைகளை உடைத்தெறிந்து ..பெண்கள் சொத்துரிமை, படிப்பறிவு, அரசுப்பணி முதலியவற்றைப் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற பெண் விடுதலைச் சிந்தனைகளை மக்கள் முன் வைக்கும் நூல்.              (விலை : ரூ 40) (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)

விடுபூக்கள் - தொ.பரமசிவன்

_________________________ விடுபூக்கள் (தொ.பரமசிவன்) _________________________       மாலை கட்டிய பின் எஞ்சிய பூக்களை திருநெல்வேலி பகுதியில் விடுபூக்கள் என்பார்கள்! இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் இது போல் தான்!       ஆசிரியரின் (தொ.ப) புத்தகங்களில் இடம் பெறாமல் விடுபட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்!        எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ் பண்பாட்டின் வேர்களை எடுத்துரைத்து வரும் தொ.ப..அவர்களின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு, இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கிறது!         தமிழ்ச் சமூக வாழ்வியலைக் கருத்தியல் நிலையில் நினைவுபடுத்தும் இக்கட்டுரைகள், அடிப்படை அரசியலை, கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன!📚          (கயல் கவின் பதிப்பகம்)

குறளோவியம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர்

_________________________ குறளோவியம் (முத்தமிழ் அறிஞர் கலைஞர்) _________________________       கலைஞர் தீட்டிய உரை ஓவியம்.. எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அருமையான காவியம்..       திருக்குறள் கலைஞருக்கு அருமருந்து என்றால் மிகையாகாது!     "சுருக்கமாக, சுவையாக குறளுக்குப் பொழிப்புரை பகன்றோர் உளர்! இசைத்தமிழால் இனிய குறளைச் செவிவழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்! இவற்றிற்கிடையே என் பங்காக நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி,  நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீர் வழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவ விட்டிருக்கிறேன்! " என்று குறளோவியத்திற்கு குறிப்பு வழங்கினார் கலைஞர்!       இதைவிட ஓர் சிறந்த அறிமுகம் இந்நூலுக்கு தேவையில்லை! இந்நூலை வாசியுங்கள்!  இலக்கியச் சோலையில் இன்பத் தேனையுண்டு எழுச்சி பெறுவீர்கள்! 📚          (பாரதி பதிப்பகம்)

காந்தள் நாட்கள் - இன்குலாப்

____________________________ காந்தள் நாட்கள் (இன்குலாப்) ____________________________        உணர்ச்சி மிகுந்த கவிதைகளை, எழுச்சிமிகு வரிகளால் வடித்திருக்கிறார்.சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதியிருக்கும் விதம் அருமை.       சமூகம் மற்றும் தனி மனித உறவுகள் சார்ந்த பல்வேறு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. "சாண் ஏறினால் முழம் சறுக்கும் ஏறிக்கொண்டே இரு :முழம் ஏறி உச்சிக்கு நீ போவாய் - சத்தியம் "      என்று முயற்சியை உயர்த்திப் பிடித்தல், முற்போக்குச் சிந்தனை, சமூக அவலங்களைச் சாடுதல், பெண்ணியச் சிந்தனைகள், நகைச்சுவையின் பரிமாணங்கள் முதலியவை இந்நூலில் மிளிர்கின்றது.            2017 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.               (விலை : ரூ130)               (அன்னம் அகரம் பதிப்பகம்)