Posts

Showing posts from January, 2022

நடந்து செல்லும் நீரூற்று(எஸ். இராமகிருஷ்ணன்)

_______________________________ நடந்து செல்லும் நீரூற்று (எஸ். இராமகிருஷ்ணன்) _______________________________        அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும், தொடப்படாத தனிமைகளும் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன.       ஆழம் காணமுடியாத இருளில் உடைந்த மனதுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவை அல்ல. எஸ்.ரா வின் படைப்புகளில் மற்றும் ஓர் அதிசயம் "நடந்து செல்லும் நீரூற்று ."         (விலை _ ரூ 95)         (உயிர்மை பதிப்பகம்)

உரைகல்(தொ.பரமசிவம்)

______________________________ உரைகல் (தொ.பரமசிவம்) _______________________________        ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், பேட்டிகள், அணிந்துரைகள், உரைகள் ஆகியவை இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.        அழகான நடையில் சிறிய சிறிய சொற்றொடர்களில் கருத்துகளைப் புரிந்து கொள்ளும்படி விளக்கி உள்ளார்.        பேரக் குழந்தைகள் குறித்த கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு, நிகழ் காலத்தில் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளிடமிருந்து அந்நியப்பட்டு விட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.            (விலை : ரூ 130)            (கலப்பை பதிப்பகம்)

அந்தக் கதவு மூடப்படுவதில்லை(பிரபஞ்சன்)

_______________________________ அந்தக் கதவு மூடப்படுவதில்லை (பிரபஞ்சன்) ________________________________      தமிழில் ஆகச் சிறந்த எழுத்தாளரான பிரபஞ்சன் அவர்கள் 2008 ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.       இதில் உள்ள பல கதைகள், அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும்.        சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களைப் பற்றி பேசும் இக்கதைகள், அன்பால் மட்டுமே மனித சமுதாயம் மீட்சி பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் நேர்த்தி அற்புதம்.         சொல்முறை சார்ந்த அவருடைய புதிய தடம் வாசிப்பவர்களுக்குத் தென்படும்.              (விலை : ரூ 180)              (நற்றிணை பதிப்பகம்)

ஆறாவது தாகம்(ஜெக சிற்பியன்)

__________________________________ ஆறாவது தாகம் (ஜெக சிற்பியன்) ___________________________________      இப்புதினத்தின் நாயகன் மாதவனின் மன வண்டு சுயதேவைகளை மனத்தில் கொண்டு சுற்றி சுற்றி அலைகிறது. அவனுடைய மன அலைகள் நம்மை மலைக்கச் செய்கின்றன.வியக்கச் செய்கின்றன.        இந்நூலின் மூன்று நாயகிகள்.. கஸ்தூரி, கிரேஸி, நீலமணி வெவ்வேறு குணமுள்ள.. வெவ்வேறு தாகத்தை மனத்தில் கொண்ட பாத்திரங்களாக ஆசிரியர் அற்புதமாகப் படைத்துள்ளார்.        நல்ல பல கருத்துகளையும், தத்துவங்களையும் தம் கதாப்பாத்திரத்தின் வாயிலாக மலரச் செய்துள்ளார் ஆசிரியர். படிக்க மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்..                   (வானதி பதிப்பகம்)

துரோகச்சுவடுகள்(வெ.இறையன்பு IAS)

________________________________ துரோகச்சுவடுகள் (வெ.இறையன்பு IAS)  _________________________________       இந்த நூலைப் படித்தவுடன் எல்லோருடைய நினைவிலும் வரும் சொற்தொடர்.. "எல்லோரையும் நேசியுங்கள்.. சிலரை மட்டும் நம்புங்கள் .."      எல்லா வயதினரும், எல்லா மதத்தினரும், எல்லா நாட்டினரும், படித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நூல்..         "ஏமாறாதே! ஏமாற்றாதே! " என்ற மொழியின் விரிவாக்கம்.          யாரிடமும் அளவுடன் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று கூறியிருப்பதுடன், அதற்கு வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கூறி உவமைகளுடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் இறையன்பு அவர்கள்.         அடுத்தகளுடைய வஞ்சகத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.அவர்களைக்கூட வஞ்சிக்காமல் இருப்போம்.இதுதான் இந்த நூல் கற்றுத்தரும் பாடம்.                (விலை : ரூ 80)      (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

யாரோ போட்ட பாதை(தி.க.சந்திரசேகரன்)

________________________________ யாரோ போட்ட பாதை (தி.க.சந்திரசேகரன்) _________________________________      வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு வழிகாட்டும் நூல்.        ஆசிரியரின் பொருள் பொதிந்த வார்த்தைகளை புரிந்து கொள்பவர்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றிகளைத் தங்களோடு தக்கவைத்துக் கொள்வார்கள்.        எளிமையானக் கதைகளைக் கொண்ட இந்நூல் மனதைக் கரைத்து ஆழ்மனதிற்குள் புகுந்துவிடும் தன்மை கொண்டவை.        வாசிப்பவர் மனதை உற்சாகமூட்டி சிறந்த மாற்றங்களை உருவாக்கும் உன்னதப் படைப்பு. புத்தகங்கள் ... தொட்டுப் பார்த்தால் காகிதம்! தொடர்ந்து படித்தால் ஆயுதம்!!                 (விலை : ரூ 70)                (விஜயா பதிப்பகம்)

அக்னியும் மழையும்(கிரீஷ் கார்னாட்)தமிழில்...பாவாணன்

_______________________________ அக்னியும் மழையும் (கிரீஷ் கார்னாட்) தமிழில்...பாவாணன் ________________________________       ஆசிரியர் இந்திய நாடக உலகின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.      கன்னட நாடகங்களுக்கு பல உலக நாடுகளின் மேடைகளில் கௌரவத்தையும், பாராட்டையும் பெற்றுத் தந்தவர்.      இவர் படைப்புகள் சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளையே முன் வைக்கின்றன.     காட்சி அமைப்பில் அவர் உருவாக்கும் வசீகரம் மிகுந்த கவித்துவம், பார்வையாளர்கள் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிடும் தன்மை கொண்டது.     சமூகத்தில் தன்னைக் கட்டுப்படுத்தும் எல்லா அம்சங்களிலிருந்தும் விடுபட்டு மீறி நிற்கின்ற மன ஆற்றலும், போர்க்குணமும் கொண்ட பெண் பாத்திரங்களும் நாடகத்திற்கு அழகு சேர்ப்பார்கள்.             (விலை :ரூ 490)             (காலச்சுவடு பதிப்பகம்)

கருவாச்சி காவியம்(வைரமுத்து)

_________________________ கருவாச்சி காவியம் (வைரமுத்து) _________________________       கருவாச்சியின் கணவன் திருமணமான ஆறே நாளில் அவளை விலக்கி வைக்க பஞ்சாயத்தைக் கூட்டுகிறான்!      விலக்கி வைக்கப்பட்ட அவள் குழந்தையைப் பெற்று வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவுகிறாள் என்பதே கதைக் கரு!      அனுபவம் ஒரு பெண்ணை எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்!       ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அவர்களின் நம்பிக்கைகள், வைராக்கியம், பழி வாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, அறியாமை போன்ற பல செய்திகளை இலாவகமாகச் சொல்லிச் செல்கிறார் கவிஞர்!      இந்நூலை படித்து முடிக்கும் வரையில்  தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு கிராமத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சொல்லோவியம்! " கருவாச்சி காவியம் "                  (விலை : ரூ 270)              ...

கவிஞர் பா.விஜய்யின் சிந்தனைச் சிறகுகள்

______________________________ கவிஞர் பா.விஜய்யின் சிந்தனைச் சிறகுகள் _______________________________       வாழ்க்கையை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பாடம்.ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு ஞானம்.       நல்ல சிந்தனைகளைத் தழுவி வாழ்வதுதான் தமிழர் வாழ்வு.அதுதான் உயர்ந்த வாழ்வு.      கவிஞரின் இந்நூலை வாசிப்பவர், அவர் எழுத்துகளில் பளிச்சிடுகின்ற சிந்தனைக் கீற்றுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.       சோர்ந்து போய்விடாமல் சிகரங்களை நோக்கிய பயணத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் ஆற்றல் உடையவை இக்கவிதைகள். "சொல்லிக் கொண்டிருக்கும் போதே செய்து விடு.. மற்றவர்கள் உன்னைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் " என்று உழைப்பைப் பற்றியும், "விழுந்து கிடப்பதை விட எழுந்து நடப்பதே மேல் " என்று தன்னம்பிக்கை பற்றியும் கவிஞர் பல்வேறு கோணங்களில் பார்வைகளைப் பதிவு செய்துள்ளார்.             (விலை : ரூ 70)              (குமரன் பதிப்பகம்)

மேல் கோட்டை(உதயணன்)

______________________________ மேல் கோட்டை (உதயணன்) _______________________________        இந்த சரித்திர நாவல் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் நடந்த சரித்திர நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.       இராமானுஜர் கர்நாடகத்தில் தங்கி இருந்த காலகட்டம், ஹொய்சாளர் ஆட்சி நடந்த காலகட்டம், சமண சமயம் தலைதூக்கியிருந்த காலகட்டம் என இம்மூன்றும் நடைபெற்ற 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில் எழுந்த புதினம் இது.        ஆசிரியர் இப்புதினத்தில் இடம் பெரும் இடங்களைக் கள ஆய்வு செய்து எழுதியுள்ளதால், உயிரோட்டத்துடனும், சிறப்பாகவும் அமைந்துள்ளது.        நிகழ்ச்சிகள் யாவும் பண்பாடு சிதைவுறாமல், அழகான வர்ணனைகளுடன் அமைந்திருப்பதை வாசிப்பவர்கள் உணரலாம்.                 (விலை : ரூ 650)                 (சீதை பதிப்பகம்)