Posts

Showing posts from September, 2021

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை(பவா செல்லத்துரை)

______________________________ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (பவா செல்லத்துரை) _________________________________           தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி பவா அவர்களின், முகம்.. முதலாக , நட்சத்திரங்கள் ஒளித்து கொள்ளும் கருவறை.. ஈறாக 11 சிறுகதைகள் கொண்ட நூல் இது.         ஒவ்வொரு கதையும் அருமையான சூழலில், வியப்பேற்படுத்தும் மனிதர்களைக் கொண்டு, ரசனையோடு, அழகிய நடையில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.           கதைகளைப் படித்து முடித்தபின் தரும் இதம்.. வசீகர அனுபவங்கள் .. என்றென்றும் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கும்.            பவா அவர்களின் கதைகள், தமிழ்க் கதை உலகை விரிவாக்குகின்றன.உதயசங்கர் அவர்கள் கூறுவது போல கதைகளை வாசித்து முடித்தவுடன் அழுகையும், கோபமும். கண்ணீரும், ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது என்பதே உண்மை.                       (விலை : ரூ 100)               ...

பள்ளிகொண்டபுரம்(நீல.பத்மநாபன்)

_________________________ பள்ளிகொண்டபுரம் (நீல.பத்மநாபன்) _________________________        அனந்தநாயரின் துக்கம் கலந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்நூலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய, இன்றைய கலாச்சார வரலாறுகள் பின்னிப் பிணைந்துள்ளது!        மலையாள நாவலாசிரியர்களில் சிலர் தங்களது பிரபலமானப் படைப்புகளில் திருவனந்தபுரம் என்னும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள்! ஆனால் அவர்களில் ஒருவராலும், தகழி சிவசங்கரபிள்ளையாலோ கூட இந்த நகரின் ஆன்மாவைச் சிக்கென பிடிக்க முடியவில்லை!        ஆனால், திரு. நீல .பத்மநாபன் என்னும் தமிழ்ப்புதின ஆசிரியருக்குத் தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூர்ண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது என்று மலையாள விமர்சகர் வி.கிருஷ்ணவாரியாரால் பாராட்டப்பட்ட புதினம் இது! 📚         (காலச்சுவடு பதிப்பகம்)

அகிலன் சிறுகதைகள்

______________________________ அகிலன் சிறுகதைகள் ______________________________       ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கிறானோ அதே உணர்வை, படிக்கும் போது வாசகர்களும் பெறுவதே அப்படைப்பின் வெற்றி! அத்தகைய படைப்பாளி அகிலன்!       இரண்டு தொகுப்பாக வெளிவந்துள்ள அகிலன் சிறுகதைகள், அடிமை இந்தியா முதல் இன்றுவரை தமிழக வரலாற்றின் மனச்சாட்சியாகவே படைக்கப்பட்டுள்ளது!       தனிமனித உணர்வுகள்மூலம் சமூகப் பிரச்சனைகளை அச்சமின்றி தோலுரித்துக் காட்டுகின்றன!       "எல்லோரும் பெய்த மழை " "பெரிய மீன் " "பூச்சாண்டி " "சாதி இரண்டொழிய " எனப் பல சிறுகதைகள் இதற்குச் சான்று!        குடும்பம், உறவு, மனிதம், பாசம், வெறுப்பு, பொறுப்பு, உழைப்பு, ஏழ்மை, அரசியல், பெண்ணியம் என அனைத்து விசயங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன அகிலனின் சிறுகதைகள்!               (தாகம் பதிப்பகம்)

உப பாண்டவம்(எஸ். இராமகிருஷ்ணன்)

_______________________________ உப பாண்டவம் (எஸ். இராமகிருஷ்ணன்) ________________________________       இந்த நவீன நாவல் மகாபாரதத்தின் மீதான ஒரு புனைவாகும்! மகாபாரதக் கதையில் வரும் துணைப் பாத்திரங்களின் வழியாக பாரதத்தைச் சொல்லும் கதையாகும்!       மகாபாரத்தில் வரும் உப கதாப்பாத்திரங்களின் வழியே அறியாத கதையையும், வெளிப்படுத்தப்படாத துக்கமும் புனைவுருவாக்கம் செய்யப் பட்டுள்ளன!        எஸ்.ரா. கதை சொல்லும் விதம் சாதாரண அறிவுக்கு எட்டாத, அடங்காத காலத்தின் ரகசியம் போல விரிந்து செல்கிறது!        எழுத்து என்று நமக்குள் இருக்கும் எல்லைகளின் பிம்பம், சொந்த உருவகங்களில் கரைந்து கரைந்து நாமும் எழுத்தாளரின் பின் தொடரும் நிழலாக வியப்பின் ஆழச் சுழிக்குள் கொண்டு செருகிக் கொள்கிறோம்! நவீன இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் நூல் இது!           (விலை : ரூ 375)           (தேசாந்திரி பதிப்பகம்)

வேங்கை வாசல்(உதயணன்)

_______________________________ வேங்கை வாசல் (உதயணன்) _______________________________       "வேங்கை வாசல் " என்னும் இந்த சரித்திர நாவல், காஞ்சி கைலாசநாதர் கோயில் என்னும் சிவாலயம் சோழர்கள் காலத்தில் மூடப்பட்டு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது என்னும் சிறிய வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது!       கி.பி.1364 இல் விஜயநகரத்து இளவரசர் கம்பன உடையார் காலத்தில் மீண்டும் திறக்கப்பட்டு ஆடி மாதம் திருவிழாக்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது!        இச்செய்தியின் முக்கியத்துவம் கருதி, அதனைத் தேடி ஆராய்ந்து யார் காலத்தில் ஏன் மூடப்பட்டது என்பதற்கான கதைப்பின்னல்கள் அமைத்து கதையினை சுவைபட எழுதிச் சென்றுள்ளார் ஆசிரியர்! சுமார் 828 பக்கங்களைக் கொண்டது! புத்தகப் பிரியர்களுக்கு புத்தாக்கம் தரும் நூல்!                (சீதை பதிப்பகம்)

குழந்தைச் செல்வம்(கவிமணி தேசிய விநாயகம்)

_________________________ குழந்தைச் செல்வம் (கவிமணி தேசிய விநாயகம்) _________________________        குழந்தைகள் தாமே விரும்பிக் கற்கும் வண்ணம் அத்தனை எளிமையுடனும், இனிய ஓசையுடனும் இந்நூலில் பாடல்கள் அமைந்துள்ளன!         இந்நூல் ஐந்து பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது!(மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப்பாட்டு, பஞ்சாமிர்தம்)            மாணவக் கண்மணிகள் கவிமணியின் கவிதைகளைப் படித்து பயனுற வேண்டும் என்பதே ஆசிரியர்களின் அவா!       "தேனொழுகக் கவிபாடும்         தேசிய விநாயகமே நாள்தோறும் உன் கவிபாடி நாங்கள் மகிழ்வோமே "📚

எண்ணப்பறவை சிறகடித்து(வெ.இன்சுவை)

_________________________ எண்ணப்பறவை சிறகடித்து (வெ.இன்சுவை) _________________________        "எண்ணப்பறவை சிறகடித்து "என ஆசிரியர் தன் எண்ணங்களை, அனுபவங்களை..பேனாவில் மையிட்டு எழுதினாரா...! ஒவ்வொன்றையும் படம் பிடித்து வந்தாரா...! என பிரமிக்க வைக்கும் வகையில் 44 அற்புதமான கட்டுரைகளை இந்நூலில் வழங்கியுள்ளார்!       அவருடைய ஒவ்வோர் அசைவிலும் அலையலையாய், மடைதிறந்த வெள்ளம் போல் எழுத்தின் வழியே பாய்ந்து வருகின்ற விதம் படிப்பவரை விழியுயர்த்தச் செய்யும்!         நமது சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் அநாகரிங்களை, அவலங்களை, அவஸ்தைகளை இவ்வளவு திறம்பட இவரால் தான் எழுத முடியும்! என்கிற வகையில் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு வகையான அனுபவத்தை அழகுபடச் சித்தரிக்கிறார்!  "எண்ணப்பறவை சிறகடித்து "     எல்லோரும் எண்ணங்களையும் தூய்மைபடுத்தும் வண்ணப்பறவை!! 📚

அந்தர் முகம்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்...கௌரி கிருபானந்தன்

_____________________________ அந்தர் முகம் (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி கிருபானந்தன் _______________________________        மனித உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் சுயநலம் எத்தனை விதமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய நடையில் சித்தரித்திருக்கிறார்.        அதைக் கண்டு மனிதர்களை வெறுப்பதும், தனக்குள்ளே ஒடுங்கிப் போவதுமாய் இருந்த நாயகனை "பிரணவி " என்ற சிநேகிதி, அன்பு என்ற மந்திரக்கோலால் அவன் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறாள்.        மனிதர்களிடம் படிந்துவிட்ட மன அழுக்குகளை அலசி ஆராய்வதோடு சுயநலத்தைக் குறைத்துக் கொண்டு, மனித நேயத்தை வளர்த்துக் கொண்டால் இந்த சமுதாயம் சொர்க்கத்திற்கு இணையாய் மாறும் என்ற கருத்துடன் கதை முடிவடையும். எண்டமூரியின் படைப்புகளில் ஓர் புதுமை. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்!                  (விலை : ரூ 215)                 (அல்லயன்ஸ் கம்பெனி)

கால் முளைத்த கதைகள்(எஸ்.இராமகிருஷ்ணன்)

_____________________________ கால் முளைத்த கதைகள் (எஸ்.இராமகிருஷ்ணன்) _____________________________       கற்பனையால் நெய்யப்பட்ட அற்புதமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.        வியப்பும் பயமும் ஒன்று கலந்தவை.இயற்கையை மனிதர்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமே இக்கதைகள்.           உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.         உலகெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர், இயற்கையைக் குறித்து சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இச்சிறுகதைத் தொகுப்பு சிறுவர் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.       பழங்குடி மக்களின் தனித்துவத்தையும், கற்பனை வளத்தையும் இந்நூலை வாசிப்பவர்கள்உணர்வார்கள்.                (விலை : ரூ 145)                (உயிர்மை பதிப்பகம்)

கொஞ்சம் ஹைக்கூ..கொஞ்சம் சென்றியு..(சென்னிமலை தண்டபாணி)

_________________________ கொஞ்சம் ஹைக்கூ..கொஞ்சம் சென்றியு.. (சென்னிமலை தண்டபாணி) _________________________      ஹைக்கூ கவிதை வாசிப்பது என்பது வாசகர்களுக்கு சுகமான அனுபவம்! படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கும் உணர்த்துவது ஹைக்கூ!     ஹைக்கூ எழுதுவது ஒரு கலை! அக்கலை கை வரப் பெற்றால் ஹைக்கூ கவிதைச் சிலைகள் பல உருவாகலாம்!      "மரக்கிளையில் தூளி! பாடுகிறாள் பாட்டு! கைகளில் நாற்று! " கிராமத்தில் நாற்று நடும் பெண்ணையும், மரத்தில் கட்டிய தொட்டிலில், உறங்கும் குழந்தையையும் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகிறது கவிதை!      "உறங்கும் நேரம்!        ஒப்பாரி ராகம்!       தொலைக்காட்சி நாடகம்! " இது தொலைக்காட்சி நாடகங்களை சாடும் கவிதை! இது போல பல கவிதைகளைப் படிக்கும் போது மழைச்சாரல் என மனம் மகிழும்!📚         (விஜயா பதிப்பகம்)